தாய்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுக்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கும் வகையில் கல்வி அமைச்சு அக்குழுக்களுக்கென நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி தெரிவித்துள்ளார்.
தாய்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுக்களுக்கு $33 மில்லியன் நிதி வழங்கப்படும். இது முந்தைய தவணையில் இருந்த $30 மில்லியனைவிட அதிகம்.
இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு நிதியாண்டு 2026லிருந்து 2030 வரைக்குமானது.
இதன்மூலம் குழந்தைகளின் தொடக்கப் பருவத்தில் பெற்றோர்களுக்கு ஆதரவளிப்பதில் தனிக் கவனம் செலுத்த கல்வி அமைச்சு அதிக ஆர்வம் கொண்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு அல்ஹப்ஷி குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து தாய்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுக்கள், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடனான அன்றாட உரையாடலில் தாய்மொழியை இயல்பாக இணைத்துக்கொள்ள உதவுவதற்காக, தாய்மொழி பாலர் பள்ளி ஆசிரியர்கள் வழிநடத்தும் இலவசப் பயிலரங்குகளை வழங்க சமூக மன்றங்களுடன் இணைந்து கல்வி அமைச்சு பணியாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

