துவாஸ் நோக்கிச்செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டி விபத்துக்குள்ளானர்.
25 வயதான அந்த மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து காலை 8 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக துவாஸ் சோதனைச் சாவடி நோக்கிச் செல்லும் 5 வழி சாலையில் மூன்று வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் காலை 8 மணிக்கு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டது.
அவ்வழியாகப் பயணம் மேற்கொள்பவர்கள் பயண நேரத்தில் தாமதத்தை ஏதிர்பார்க்கலாம் என்று அது குறிப்பிட்டது.
போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஒன் மோட்டரிங் தளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஜோகூர் நோக்கிச் செல்லும் சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததைக் காணமுடிந்தது.