பார்ட்லி ரோடுக்கு அருகில் ஏப்ரல் 8ஆம் தேதி காலை மோட்டார்சைக்கிளும் காரும் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, 50 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
கார் ஓட்டுநரான 35 வயது மாது விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறையினர் கூறினர். பார்ட்லி ரோட்டை நோக்கிச்செல்லும் பார்ட்லி ரோடு ஈஸ்ட் மேம்பாலத்தில் நடந்த விபத்து குறித்து காவல்துறைக்கு காலை 8.50 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு காலை 9.30 மணிவாக்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர்கள் அந்த ஆடவரை சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
சென்ற ஆண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள், அவர்களுடன் பயணம் செய்தவர்கள் ஆகியோர் உயிரிழந்த விகிதம் 44.7 விழுக்காடு அதிகரித்தது.
மொத்தம் 68 பேர் உயிர் இழந்ததாகக் காவல்துறை வெளியிட்ட ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டின.
சிங்கப்பூரில் வாகனங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்கள் 15 விழுக்காட்டுக்கும் குறைவு என்றாலும், 2023ல் நிகழ்ந்த அனைத்து சாலை விபத்துகளிலும் பாதிக்கும் மேல், மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுடன் பயணம் செய்தோரும் சம்பந்தப்பட்டிருந்தனர்.