சிங்கப்பூருக்கு உன்னத சேவையாற்றியவர்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்வாண்டு 21 பிரிவுகளில் 6,258 பேருக்கு தேசிய தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவர் பாபி சின் யோக் சூங் பெருமதிப்பிற்குரிய சேவை விருது பெறவிருக்கிறார்.
அவருக்கு அடுத்து இந்த விருதை சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகத்தைச் சேர்ந்த திரு திமத்தி ஜேம்ஸ் டி சூசா, யேல்-என்யுஎஸ் பல்கலைக்கழகத்தின் ஆளுமைச் சபைத் தலைவர் கே குவோக் ஊன் குவோங், எஸ்டி இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் குவா சோங் சேங் ஆகியோர் பெறுகின்றனர்.
தேசிய விருதுபெறுவோரில் 688 பேர் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 908 பேருக்கு செயல்திறன் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3,161 பேருக்கு நீண்டகால சேவை விருது வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற நாடாளுமன்றத் தமிழ் மொழிபெயர்ப்பாளரும் மூத்த சமூக சேவையாளருமான அமரர் ஆ. பழனியப்பன், 73 வயதில் காலமான பிறகு இவருக்குப் பொதுச் சேவைக்கான நட்சத்திர விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1968 முதல் 1990 வரை திரு பழனியப்பன் அரசு நீதிமன்றத்தில் உரைபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இடையில் 1981 முதல் 1983 வரை சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திலும் அவர் பணியாற்றினார்.
நாடாளுமன்றக் கூட்டங்கள் தொடங்கி, வரவுசெலவுத் திட்டம், பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை என முக்கிய அரசாங்க நிகழ்வுகளில் நேரடி உரைபெயர்ப்பு, பேச்சுகளின் எழுத்துபூர்வ மொழிபெயர்ப்பு, அமைச்சுகளின் புதுச்சொல்லாக்கம் என அரசாங்க மொழிபெயர்ப்புத் துறையில் 30 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கும் திரு பழனியப்பன், நாடாளுமன்ற மொழிச் சேவைகள் பிரிவு தலைமை வல்லுநராக இருந்து 2020 ஜூலை மாதம் ஓய்வுபெற்றார்.
திரு பழனியப்பனுக்கு இந்த விருது கிடைத்ததைத் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்த பெருமையாகக் கருதுவதாக அவரின் துணைவியார் திருவாட்டி சிந்தாமணி பழனியப்பன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
ஐந்து வயதில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த திரு பழனியப்பன், சிங்கப்பூரைத் தம் தாய்நாடாக நேசித்தவர் என்று திருவாட்டி சிந்தாமணி குறிப்பிட்டார். இளையர்களைத் திறனாளர்களாக ஆக்கி, அவர்களுக்குப் பொறுப்புகளைத் தருவதில் தம் கணவர் இன்பம் கண்டவர் என்றும் அவர் சொன்னார்.
இன, சமய வேறுபாடின்றி அனைவருடனும் இணக்கமாகப் பழகி, பலரின் நன்மதிப்பைப் பெற்ற திரு பழனியப்பன் பழகுவதற்கு இனியவர் என்று முப்பது ஆண்டுகளுக்குமேல் அவருடன் நாடாளுமன்றத்தின் உரைபெயர்ப்பாளராகச் சேர்ந்து பணியாற்றிய திரு ந சுப்ரமணியம், 79, கூறினார்.
காவல்துறையின் மூத்த உதவி ஆணையர் அருள் டேவிட் ஸ்காட், 53, பொது நிர்வாக வெள்ளிப் பதக்கம் (பதக்கப்பட்டை) பெறவிருக்கிறார்.
காவல்துறையில் சேரவேண்டும் என்ற நீண்டநாள் குறிக்கோள் இல்லாதபோதும், முயன்று பார்த்து அதிகாரியாகச் சேர்ந்தபோதும் திரு அருள் அந்த வேலையைத் திறம்படச் செய்து சாதித்தார்.
மொத்தம் 29 ஆண்டுகளாக காவல்துறையில் முழுநேரமாக பணியாற்றிய திரு அருள் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய தின அணிவகுப்பு முதல் லிட்டில் இந்தியா கலவரம், டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு வரை பல்வேறு நிகழ்வுகளில் சேவையாற்றினார்.
இவ்விருதைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்று பெருமிதம் பொங்க, அதே வேளையில் நன்றியுணர்வுடனும் திரு அருள் கூறினார்.
“கொள்கைப் பிடிப்போடு மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்தால் வெற்றி உறுதி,” என்கிறார் இவர்.
அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் முன்னாள் ஆளுமைச் சபை உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ராமசாமி (பொதுப் பணி சிறப்புப் பதக்கம்), கல்வி அமைச்சிலிருந்து டாக்டர் வெங்கடராமன் சங்கரராமன் (பொது நிர்வாக வெள்ளிப் பதக்கம்), இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைமை மேலாளர் மரியா பவானி தாஸ் (பொது நிர்வாக வெண்கலப் பதக்கம்) உள்பட சிங்கப்பூர் இந்தியர்கள் பலர் தேசிய தின விருது வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளனர்.