சிங்கப்பூரின் வருங்கால சீன சமூகத் தலைவர்களை உருவாக்க அரசாங்க ஆதரவுடன் திட்டம் ஒன்று நடப்புக்கு வருகிறது.
அரசாங்க நிதியுதவியுடன் இயங்கும் இத்திட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் 30, 40களில் இருக்கும் பங்கேற்பாளர்கள் கிட்டத்தட்ட 100 பேர் பலனடைவர். திட்டத்துக்குத் தகுதிபெற சீன சமூக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுதல் அவசியம். சேவையாற்றுவதில் நாட்டம் இருப்பதை அவர்கள் வெளிப்படுத்தவேண்டும் என்றார் தேசிய வளர்ச்சி அமைச்சரும் சீன சமூகத் தொடர்புக் குழுத் (சிசிஎல்ஜி) தலைவருமான சீ ஹொங் டாட்.
தோ பாயோவில் உள்ள சீனக் குலவழிச் சங்கங்கள் சம்மேளனத்தில் (எஸ்எஃப்சிசிஏ) அவர் பேசினார்.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் தொடங்கவுள்ள இப்பயிற்சித் திட்டம் ஆண்டுதோறும் நடைபெறும்.
அடுத்த தலைமுறை சீன சமூகத் தலைவர்களை உருவாக்குவதற்கான திட்டத்தை சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில்துறைச் சபை (எஸ்சிசிசிஐ), எஸ்எஃப்சிசிஏ இரண்டும் வரையும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்திருந்தார். அத்திட்டத்துக்கு அரசாங்கம் நிதி ஆதரவு வழங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
‘எஸ்எஃப்சிசிஏ’வில் 253 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அண்மை ஆண்டுகளில் இளைய தலைமுறையினரிடையே சீனக் கலாசாரம், சீ சமூகங்கள் ஆகியவற்றின் மீதான ஆர்வம் குறைந்துள்ளதாகப் பிரதமர் வோங் குறிப்பிட்டிருந்தார்.
வருங்காலத் தலைவர்களை நியமித்துப் பணிகளைத் தொடர்வதில் குலவழிச் சங்கங்கள் சவால்களை எதிர்கொண்டுவருகின்றன.