பணமோசடித் தடுப்புச் சோதனைகளில் மேலும் இலக்கு சார்ந்த அணுகுமுறையைக் கையாளுமாறு சொத்து மேம்பாட்டாளர்களிடம் நகர மறுசீரமைப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வீடு வாங்குவோரில் பெரும்பாலோருக்குச் சொத்து ஆதாரத்தையும் நிதி ஆதாரத்தையும் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் அது தெளிவுபடுத்தியது.
பணமோசடித் தடுப்புச் சோதனைகள் மேம்பாட்டாளர்களுக்கும் முகவர்களுக்கும் அதிகச் சவாலாகி வருவதாகத் தொழில்துறையினர் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆணையத்தின் வீடமைப்புக் கட்டுப்பாட்டு அதிகாரி லிங் ஹுய் லின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வெளியிட்ட சுற்றறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
வீடு வாங்குவோரிடமிருந்து தேவையற்ற அல்லது பொருத்தமற்ற தகவல்களைக் கோரும் பொதுவான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மாறாக, வரக்கூடிய ஆபத்திற்கு ஏற்ற வகையில் கட்டுமான நிறுவனங்கள் பயனீட்டாளர்களைச் சரிபார்க்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று திருவாட்டி லிங் கூறினார்.
சோதனைகள், சொத்துப் பரிவர்த்தனைகளின் தன்மை, சிக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், அணுவாயுதப் பரவலுக்கு நிதியளித்தல் போன்ற அதிக ஆபத்துகளை ஏற்படுத்தாதவர்களாகக் கணிக்கப்படுவோருக்குக் கட்டுமான நிறுவனங்கள் பயனீட்டாளர்களிடம் முழுமையான சரிபார்ப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது.

