நிதி மையமாக சிங்கப்பூரின் நிலையை மேம்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக புதன்கிழமை (பிப்ரவரி 12) அறிவிப்பு செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் தேசிய பணப் பரிவர்த்தனைத் திட்டங்களாக ஃபாஸ்ட், பேநவ், எஸ்ஜிகியூஆர் ஆகியவற்றின் நிர்வாகத்தை ஒருங்கிணைக்க புதிய அமைப்பு ஒன்று நிறுவப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் தெரிவித்தன.
இத்திட்டங்கள் தற்போது சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் வங்கிகள் சங்கம், சிங்கப்பூர் கிளியரிங் ஹவுஸ் சங்கம், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த வெவ்வேறு பண பரிவர்த்தனைத் தளங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் அவற்றின் நிர்வாகத்தை வலுப்படுத்த முடியும் என்றும் மீள்திறன் மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்த முடியும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் திரு சியா டெர் ஜியுன் தெரிவித்தார்.
“அறிவார்ந்த நிதி மையமாகத் திகழ்வதே சிங்கப்பூரின் இலக்கு. இந்த இலக்கை எட்ட சம்பந்தப்பட்ட துறையுடன் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் அதன் உறுப்பினராக இருக்கும் வங்கிகளும் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளன,” என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் தலைவர் பியுஷ் குப்தா கூறினார்.
கப்பல் சரக்குகளுக்கான கட்டண ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்காக தானியங்கி தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.