சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்துக்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரி

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்துக்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரி

2 mins read
cefd8c67-cee3-40ec-98c1-a262cb0eb04e
வூ யி-மின்னுக்கு, அரசதந்திரம். நிலையான வளர்ச்சி, அமைதிக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் 20 ஆண்டுகால அனுபவம் உண்டு. - படம்: சிங்கப்பூர் அனைத்துலக அறிநிறுவனம்

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (எஸ்ஐஎஃப்), 2026ல் தனது 35வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வேளையில், ஜூலை 1ஆம் தேதியன்று புதிய தலைமை நிர்வாகியாக கொரினா சானுக்குப் பதிலாக வூ யி-மின் பொறுப்பேற்கிறார்.

சிங்கப்பூரர்களுக்கும் உலக சமூகத்திற்கும் இடையே கருத்துகள், திறன்கள் மற்றும் வளங்களின் பரிமாற்றத்தை எளிதாக்கும் எஸ்ஐஎஃப்-இன் நோக்கத்திற்கு அவர் தலைமை தாங்குவார்.

அரசதந்திரம், நிலையான வளர்ச்சி மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் 20 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ள வூ, மனிதாபிமான உரையாடல் மையத்திலிருந்து எஸ்ஐஎஃப்-இல் இணைகிறார்.

அங்கு அவர், மோதல்களை மாற்றுவதற்கும் மனிதத் துன்பங்களைக் குறைப்பதற்கும் ஆன முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காக ஆசிய பசிபிக் வட்டார இயக்குநராகப் பணியாற்றினார்.

ஒரு மூத்த அரசதந்திரியான வூ, வெளியுறவு அமைச்சில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார். மேலும், ஐக்கிய நாட்டுச் சபையில் உள்ள சிங்கப்பூரின் நிரந்தரத் தூதரகத்தில் பணியாற்றிய காலத்தில், அவர் ஐ.நா. பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியதுடன், நிலையான வளர்ச்சிப் பிரச்சினைகளில் ஜி-77 மற்றும் சீனாவைப் பிரதிநிதித்தார்.

அவர் இதற்கு முன்னர் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனம் மற்றும் உலக அறிவுசார் சொத்து அமைப்பு ஆகியவற்றில் சிங்கப்பூரின் துணை நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார் என்று சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம், திங்கட்கிழமை (ஜூன் 8) வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ஒரு சிறந்த உலகத்திற்காகப் பணியாற்றுவதில் உள்ள பொதுவான நம்பிக்கையால் ஒன்றுபட்ட ஓர் அமைப்பான எஸ்ஐஎஃப்-ஐ, இந்த முக்கியமான மைல்கல் தருணத்தில் வழிநடத்துவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்,” என்றார் அவர்.

“இந்த ஆண்டு எஸ்ஐஎஃப் தனது 35வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், எஸ்ஐஎஃப்-ஐ அதன் அடுத்த அத்தியாயத்திற்கு வழிநடத்த திருவாட்டி வூவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று வூவின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்து எஸ்ஐஎஃப் தலைவர் ஜனதாஸ் தேவன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“நிர்வாகக் குழு மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், அவரது தலைமை எஸ்ஐஎஃப்-இன் மூலோபாய முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றார் திரு ஜனதாஸ்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தலைவர்அறநிறுவனம்