மக்கள் செயல் கட்சியின் (மசெக) முன்னாள் ஹவ்காங் கிளைத் தலைவரான ஜாக்சன் லாம், வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் கட்சி, அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு மிக முக்கியமானவராக இருப்பார் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சனிக்கிழமை (மார்ச் 29) கூறினார்.
நீ சூன் குழுத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு சண்முகம், “அவர் எனது கிளைச் செயலாளராக இருந்தார். இறங்கிப் பணியாற்றுவதில் அவர் மிகச் சிறந்தவர். அவர் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பது எனது ஆசை,” என்றார். திரு சண்முகம், நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்க் குழுவுக்குத் தலைமை வகிக்கும் அமைச்சராவார்.
திரு லாம், தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் களமிறக்கப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், “அவர் எங்கிருந்தும் போட்டியிடலாம். எங்கு போட்டியிட்டாலும் அவர், கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் மிக முக்கியமானவராக இருப்பார். அவர் எங்குப் போட்டியிடுவார், போட்டியிடுவாரா ஆகியவற்றைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்,” என்று விவரித்தார்.
டிபிஎஸ் வங்கி ஏற்பாடு செய்த ‘பாப்-அப் மார்க்கெட்’ எனப்படும் தற்காலிகச் சந்தை நிகழ்ச்சி ஒன்றில் திரு சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி மசெகவின் ஹவ்காங் கிளைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்ட திரு லாமும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கடந்த சில வாரங்களாக நீ சூன் குழுத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சிகளில் காணப்பட்டுவரும் புதுமுகங்களில் திரு லாமும் ஒருவர். முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருன் அல்ஹப்ஷி, 39, அடித்தளத் தொண்டூழியரும் அரசாங்க ஊழியருமான லீ ஹுய் யிங், 36, அறிவுசார் சொத்து வழக்கறிஞர் டெரின் சிம், 40, உள்ளிட்டோர் இதர புதுமுகங்களில் அடங்குவர்.
டாக்டர் சையது ஹருன், திரு லாம் இருவரும் மசெகவின் சார்பில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு முற்பாதியில் நடக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.