பலாவ் தீவை சிங்கப்பூருடனும் பூட்டானுடனும் இணைக்கும் புதிய விமானப் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் இந்தப் புதிய பாதையில் விமானங்கள் இயக்கப்படும். சாங்கி விமான நிலையக் குழுமம், அலி பலாவ் ஏர்லைன்ஸ், பூட்டானின் ‘டிருக் ஏர்’ நிறுவனம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை (அக். 27) இதனை அறிவித்தன.
முதற்கட்டமாக, சிங்கப்பூருக்கும் பலாவ் தீவுக்கும் இடையே நவம்பர் 23 முதல் டிசம்பர் 20 வரை வியாழக்கிழமைகளில் மட்டும் இந்த விமானச் சேவை வழங்கப்படும். டிசம்பர் 21 முதல், வாரத்திற்கு இருமுறை (வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில்) சேவை வழங்கப்படும்.
பூட்டானிலிருந்து சாங்கி விமான நிலையத்திற்கும் அதைத் தொடர்ந்து பலாவ் தீவிற்கும் ‘டிருக் ஏர்’ விமானங்கள் சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, பலாவ் தீவுக்குச் செல்வதற்கு மணிலா வழியாக ஏழு மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. புதிய பாதையில் பயணிகள் ஐந்து மணி நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து பலாவ் தீவைச் சென்றடையலாம்.
சிங்கப்பூருக்கும் பலாவுக்கும் இடையே 2022, அக்டோபரில் கையெழுத்தான, எண்ணிக்கை கட்டுப்பாடற்ற விமானச் சேவை ஒப்பந்தம் மூலம் இந்தப் புதிய பாதை சாத்தியமானது.