மனநல மேம்பாட்டு முயற்சிகளுக்கு டெலிசாய்ஸ் இண்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து மனநலக் கழகம் (IMH) நிதியம் ஒன்றைத் தொடங்குகிறது.
அதற்கான புரிந்துணர்வுக் குறிப்பில், மனநலக் கழகத்தின் உட்பிரிட்ஜ் மருத்துவமனை அறநிதி அமைப்பும் டெலிசாய்ஸ் இண்டர்நேஷனலும் புதன்கிழமை (அக்டோபர் 2) கையெழுத்திட்டன.
எஸ்டி டெலிமீடியாவின் துணை அமைப்பான டெலிசாய்ஸ், ஐந்தாண்டு பங்காளித்துவத்தின்கீழ், நிதித் திரட்டு பிரசாரம் மற்றும் நன்கொடைத் திரட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்.
இதுவரை, டெலிசாய்ஸும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் சிங்கப்பூர், ஹுவாவெய் ஆகியன உள்ளிட்ட அதன் பங்காளிகளும் $138,000 நிதித் திரட்ட உறுதிபூண்டுள்ளன.
திரட்டப்படும் நிதியை, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் தொடர்பானத் திட்டங்களுக்கு மனநலக் கழகம் பயன்படுத்தலாம்.
புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்திடும் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் சூவெலிங் கலந்துகொண்டார்.
இரு அமைப்புகளின் ஒத்துழைப்பு மூலம் திரட்டப்படும் நன்கொடைகளை, மனநல விழிப்புணர்வை அதிகரித்தல், மனக்கோளாறு இழிவு செய்யப்படுவதைத் தடுத்தல், மனநலம் பற்றிய புரிதலை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மனநலக் கழகம் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.


