சிங்கப்பூர், உலகின் முன்னனிக் கடல்துறை நடுவமாகத் திகழ்ந்து வந்தாலும் அத்துறைக்குப் புதிய பட்டதாரிகள் தேவைப்படுவதாக கடல்துறை அறநிறுவனத்தின் தலைவர் ஹொர் வெங் யு தெரிவித்துள்ளார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணில் கூறினார்.
வாழ்க்கைத்தொழிலைக் கடல்துறையில் தொடங்கி எதிர்காலத்தை மேம்படுத்துவதை இளையப் பட்டதாரிகள் பரிசீலிக்கவேண்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் வழியாக திரு ஹொர் கேட்டுக்கொண்டார்.
“வணிகத்துடன் வாழ்வியலை இணைப்பது கடல்துறையின் உயர்ந்த நோக்கமாக இருக்கிறது.
“உலகின் தலைசிறந்தக் கடல்துறையைக் கொண்ட நாடாகச் சிங்கப்பூர் திகழ்கிறது. ஆனால், தொடர் மாற்றங்களை எதிர்கொண்டு, அதன் முக்கிய வளங்களைத் தக்கவைத்துக்கொள்ள தரவுப் பகுப்பாய்வு, கரிம வெளியேற்றக் கட்டுப்பாடு போன்ற துறைகளில் சிறந்த தேர்ச்சிபெற்ற திறனாளர்கள் அதற்குத் தேவை.
“இருப்பினும், புதிய மனிதவளத்தை உருவாக்கிக்கொள்வது கடல்துறைக்குச் சவாலாக உள்ளதாக உணர்கிறேன்,” என்று திரு ஹொர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் வெற்றிக்கும் உலகப் பொருளியலுக்கும் கடல்துறை உயிர்நாடியாக உள்ளது. ஆகவே, அதனைப் பற்றிய சிங்கப்பூரர்களின் எண்ணத்தை நேர்மறையாக மாற்ற முயற்சி செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
கடல்துறை எளிதில் புரிந்துகொள்ளப்படும் துறை அல்ல. இயற்கையாகப் பலரைக் கவரும் வங்கி, மருத்துவம் போன்று அனைவரும் எதிர்பார்க்கும் பணிகள் கடற்துறையில் இருப்பதில்லை.
ஆனால், கண்களுக்குப் புலப்படாத மறைமுகச் செயல்பாடுகள் அதில் அதிகம் உள்ளன. உயர்மட்ட வணிகமும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பும் நிறைந்தது கடல்துறை.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் பொருளியலுக்கு ஆறு விழுக்காட்டுக்குமேல் கடல்துறை பங்களிக்கிறது. அத்துறையில் 140,000 வேலைவாய்ப்புகள் உள்ளன என்று 2025ஆம் ஆண்டு நடந்த கடல்துறை மாநாட்டின்போது தெரிவிக்கப்பட்டது.

