சிங்கப்பூரின் வனவிலங்குகளுக்குச் சிகிச்சையளிக்க மண்டாயில் விலங்குகளுக்கான புதிய நிபுணத்துவ மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
காப்பாற்றப்பட்ட வனவிலங்குகளுக்கான மண்டாய் வனவிலங்கு நிலையம் (Mandai Wildlife Centre) என்ற அந்த மருத்துவமனை புதன்கிழமை (ஜூலை 22) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. மண்டாய் வனவிலங்கு நிலையத்தின் லாபநோக்கில்லா பிரிவான மண்டாய் நேச்சர் (Mandai Nature) அதனைத் திறந்துவைத்தது.
மனநிறைவு தரும் அனுபவம்
அங்குப் பணியாற்றும் விலங்கு மருத்துவ இளம் தாதியான 22 வயது நத்ரா ஹசான், “வாழ்வதற்கு ஒரு விலங்குக்கு மறுபடியும் வாய்ப்பளிக்கும்போது அந்த இன்பத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. ஒவ்வொரு மேம்பாடும் கொண்டாடப்படக்கூடிய ஒரு மைல்கல்லாகும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
அக்குழுமத்தின் மற்ற இரண்டு விலங்கு மருத்துவமனைகள் விலங்குத் தோட்டத்தில் இருக்கும் விலங்குகளுக்கானவை. மண்டாய் வனவிலங்கு நிலையம், விலங்குகளுக்கு மறுவாழ்வு தந்து அவற்றை மீண்டும் இயற்கைச் சூழலுக்குள் விடுவதற்கானதாகும். அதோடு, மண்டாய் வனவிலங்கு நிலையம் விலங்குக் கண்காணிப்புக் கூடமாகவும் விளங்கும். சிங்கப்பூரின் வனவிலங்குகள் குறித்த தகவல்கள் அங்கு சேகரிக்கப்படும்.
இம்மாதம் இரண்டாம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புதிய மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தது. அப்போது காயமடைந்த பேங்கொலின் என்ற எறும்புதின்னிக்குச் சிகிச்சையளிப்பது, அனாதையான வெளவாலுக்கு உணவூட்டுவது போன்ற நடவடிக்கைகள் அங்கு காணப்பட்டன.
ரெய்ன்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வெஞ்சர் ஈஸ்ட்
‘ரெய்ன்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வெஞ்சர் ஈஸ்ட்’ (Rainforest Wild Adventure East) வளாகத்தில் புதிய மண்டாய் வனவிலங்கு நிலையம் அமைந்துள்ளது. அங்கு கூடுதல் பரப்பளவைக் கொண்ட மறுவாழ்வு வளாகம், நகர்த்தக்கூடிய அறுவை சிகிச்சை மேசை போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.
20 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் வனவிலங்குகளை மீட்ட அனுபவத்தைக் கொண்டு புதிய விலங்கு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. ‘ரெய்ன்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வெஞ்சர் ஈஸ்ட்’டுக்கு வருகை தருவோர் காட்சிக் கூடம் ஒன்றின் வாயிலாக மருத்துவமனையின் நடவடிக்கைகளைக் காணலாம்.
மண்டாய் வனவிலங்குச் சுகாதாரப் பராமரிப்பு, ஆய்வு நிலையத்தில் சேர்க்கப்பட்ட, மீட்கப்பட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து புதிய நிபுணத்துவ மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

