சிங்கப்பூரில் உயிரணு, மரபணு சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகள் இந்த சிகிச்சைகளை விரைவாகப் பெற புதிய உயிரணு சிகிச்சை உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அதிநுட்ப உயிரணு சிகிச்சை ஆய்வுக் கழகத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய உற்பத்தி ஆலையில், நடைமுறைத் தரங்களுக்கு உட்படும் 14 தூய்மையான அறைகளும், நான்கு ஆராய்ச்சிக்கூடங்களும், ஒரு தரக் கட்டுப்பாட்டுக் கூடமும் உள்ளன.
மருத்துவமனைகள், ஆய்வு நிலையங்கள், புதிய உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை உயிரணு தேர்ந்தெடுப்பு, மரபணு திரிபு போன்ற பணிகளுக்குப் புதிய ஆலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நுட்பத்திறன் மருத்துவத்தை மேம்படுத்தவும் ஆதரவளிக்கவும் ஒரு பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு அமைத்துள்ள இந்தக் குழுவுக்கு, சுகாதாரத் தலைமை இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக் தலைவராகப் பொறுப்பு வகிப்பார். மருத்துவர்கள், ஆய்வாளர்கள், சுகாதாரப் பொருளியலாளர்கள் ஆகியோர் குழுவில் இடம்பெறுவர்.
உயிரணு சிகிச்சை பல்வேறு நோய்களுக்கும் மருத்துவப் பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது நுட்பத்திறன் மருத்துவத் துறையின்கீழ் இடம்பெறுகிறது.
உயிரணு சிகிச்சை அதிக விலையானதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, புற்றுநோய் உள்ளவரின் குறிப்பிட்ட சில இரத்த அணுக்களை எடுத்து, நோய் அணுக்களைக் குறிவைக்கும் வகையில் அதனைத் திரித்து நோயாளியின் உடலில் மீண்டும் செலுத்தும் சிகிச்சைக்கு $637,000 செலவாகும்.
வெள்ளிக்கிழமை அறிமுகமான 2,000 சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட உயிரணு உற்பத்தி ஆலை, சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தில் அமைந்துள்ளது.
சிங்கப்பூரில் ஆண்டுக்கு ஏறத்தாழ 100 நோயாளிகளுக்கு உயிரணு, மரபணு சிகிச்சை தேவைப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், நுட்பத்திறன் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் முக்கியக் கூறுகளை வெளியிட்டார். முறையான மருத்துவ ஆளுமை கட்டமைப்பை நிலைநாட்டுதலும், சட்டபூர்வமான பாதுகாப்புகளை அமைப்பதும் அதில் உள்ளடங்கும்.
நுட்பத்திறன் மருத்துவச் செலவு ‘வழக்கமான சிகிச்சைகளைவிடக் கணிசமான அளவு அதிகமாக’ இருக்கும் என்பதால், அதற்கு நிதி அளிப்பதற்கான வழிமுறையும் கண்டறியப்படவேண்டும் என்றார் அவர்.
இத்தகைய சிகிச்சைகள் கட்டுப்படியாவோருக்கும் கட்டுப்படியாகாதோருக்கும் இடையில் பிரிவினை ஏற்படாமல் தடுப்பதற்குப் பொருத்தமான நிதியளிப்பு முறை தேவை.
“உலகில் எந்தவொரு சுகாதாரப் பராமரிப்புத் துறையிலும் இதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், உயிரணு, மரபணு சிகிச்சையின் இயல்பினால், தேசிய சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதியை வலுப்படுத்துவதுதான் தீர்வாக இருக்கக்கூடும்,” என்றார் திரு ஓங்.