உலகிலேயே இவ்வாண்டின் ஆகச் சக்திவாய்ந்த சூறாவளியான ரகாசா, தைவானைப் புயல் காற்றுடனும் கடும் மழையுடனும் செப்டம்பர் 23ஆம் தேதி தாக்கியது.
வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாகவும் காணமற்போன 11 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
தைவானில் நிகழ்ந்த அந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சிங்கப்பூரர்கள் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை எனச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அமைச்சின் இணையப்பக்கத்தில் தங்கள் பயணம் குறித்த தகவல்களைப் பதிவுசெய்த சிங்கப்பூரர்களுடனும் தைவான் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக அது மேலும் கூறியது.
தைவானில் இருக்கும் அல்லது அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சிங்கப்பூரர்கள் விரிவான பயணக் காப்புறுதியைப் பெறவும் அது வலியுறுத்தியுள்ளது.
தங்கள் பயணம் குறித்த தகவல்களை வெளியுறவு அமைச்சின் https://eregister.mfa.gov.sg/ எனும் இணையப்பக்கத்தில் பதிவு செய்யுமாறும் சிங்கப்பூரர்களை அது அறிவுறுத்தியுள்ளது.
“தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் இருக்கும் குவாங்ஃபூ நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைத்து சிங்கப்பூர் வருந்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என அமைச்சு தமது அறிக்கையில் குறிப்பிட்டது.