சிங்கப்பூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று முஸ்லிம்கள் கொண்டாடும் நோன்பு பெருநாளன்று ‘தக்பீர்’ சொல்வதும் ‘குத்பா’ எனப்படும் சமய சொற்பொழிவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாது என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கேட்ட கேள்விகளுக்கு நேற்று (மே 20) விளக்கமளித்த முயிஸ், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறையின்படி, இங்குள்ள இலவச ஒளிவழிகளில் எந்தவிதமான சமய நிகழ்ச்சிகளும் இலவச ஒளிவழிகளில் ஒளிபரப்பப்பட அனுமதி அளிக்கப்படாததே அதற்குக் காரணம் என்று கூறியது.
நோன்பு பெருநாளன்று காலையில் மலாய் வானொலி நிலையமான ‘வர்னா 94.2’ல் ‘தக்பீர்’ சொல்லும் நிகழ்வு இடம்பெறும். ‘தக்பீர்’ சொல்வதும் ‘குத்பா’ ஓதுவதும் இணையத்தில் மட்டும் ஒளிபரப்பப்படும். அந்தந்த பள்ளிவாசல்களின் ஃபேஸ்புக் பக்கங்களிலும் இந்த நிகழ்வு ஒளிபரப்பப்படும்.
மலாய் ஒளிவழியான ‘சூர்யா’வில் அவை ஒளிபரப்பப்டாததற்குக் காரணம் என்னவென்று மலாய்/மஸ்லிம் சமூகத்தினர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து முயிஸ் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
கொவிட்-19 நோய்ப் பரவலை எதிர்கொள்வதற்கான நடைமுறைகள் ஜூன் 1ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் தற்போதைய சூழலில் நோன்பு பெருநாள் இடம்பெறுவதால், அன்றைய தினம் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் பங்கேற்கக்கூடாது என்று முயிஸ் முன்னதாகக் கூறியிருந்தது.
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரின் 70 பள்ளிவாசல்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online