வரும் திங்கட்கிழமை முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை மெர்லயன் பூங்காவில் இருக்கும் மெர்லயன் சிலையைப் புகைப்படம் எடுக்க முடியாது.
பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அது மூடப்பட்டிருக்கும் என்பதே அதற்குக் காரணம்.
“இந்தக் காலகட்டத்தில் பழுதுபார்ப்புப் பணிகளாலும் தடுப்புவேலிகளாலும் அசௌகரியம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்களின் புரிதலை நாடுகிறோம்,” என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது.
மெர்லயன் சிலை அண்மையில் ஜூலை 27 முதல் ஜூலை 28 வரை பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படிருந்தது.
உள்ளூர் சிற்பி லிம் நாங் செங் 1972ஆம் ஆண்டில் செதுக்கிய அந்த தேசியச் சின்னம், சென்ற ஆண்டு செப்டம்பரில் அதன் 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது.
சில மாதங்களாக நீடிக்கவிருக்கும் பழுதுபார்ப்புப் பணிகளின்போது, அதற்கு அருகில் உள்ள ‘குட்டி மெர்லயன்’ என்று பொதுவாக அழைக்கப்படும் சிறிய சிலையைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.