பாதுகாக்கப்பட்ட அரிய வகை ஆமை ஒன்றை ஜூரோங் ஈஸ்ட்டில் ஒருவர் எடுத்துச் சென்ற சம்பவம் குறித்து தேசிய பூங்கா வாரியம் விசாரித்து வருகிறது.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24ல் உள்ள நடைபாதை ஒன்றில் ஆமை இருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி சமூக ஊடகங்களில் பரவியது.
யாரேனும் செல்லமாக வளர்த்த ஆமை தப்பித்து வந்துவிட்டதோ என்று சிலர் பேசியது காணொளியில் பதிவாகி இருந்தது. அந்த ஆமையைச் சமைக்கலாமா என்று ஒருவர் வேடிக்கையாகக் கேட்பதும் அதில் பதிவாகி இருந்தது.
நடைபாதையில் காணப்பட்ட ஆமை அப்புறப்படுத்தப்பட்டது தொடர்பாக தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு பராமரிப்புக் குழு இயக்குநர் ஹாவ் சூன் பெங் கூறுகையில், “காணொளியில் பார்த்ததன் அடிப்படையில் அந்த ஆமை ஆசிய மெல்லோட்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்,” என்றார்.
“அந்த வகை ஆமைகள் வனவிலங்குச் சட்டம் 1965ன்கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்கினத்தைச் சேர்ந்தவை.
“வாரிய அதிகாரிகள் வந்து சேருவதற்குள் ஆமையை யாரோ ஒருவர் அங்கிருந்து அகற்றிவிட்டார்.
“வனவிலங்குப் பராமரிப்பு தலைமை இயக்குநரின் அனுமதி இன்றி வனவிலங்குகளை வைத்திருப்பதோ எடுத்துச் செல்வதோ வனவிலங்கு சட்டத்தின்கீழ் குற்றமாகும்,” என்ற அவர், நடைபெற்ற சம்பவம் குறித்து வாரியம் விசாரித்து வருவதாகவும் சொன்னார்.