அன்றாட பயன்பாட்டுக்கான 100 பொருள்களின் விலையை ஏற்றாமல் ‘சாஸ்’ அட்டை உள்ளோருக்கான சிறப்புக் கழிவுகளை இரட்டிப்பாக்கப்போவதாக என்டியுசி பேரங்காடி நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையில் இந்தச் சலுகை நடப்பில் இருக்கும். மத்திய கிழக்குப் போரினால் ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றத்தைச் சிங்கப்பூரர்கள் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஃபேர்பிரைஸ் குழுமம் (எஃப்பிஜி) தெரிவித்தது.
ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் உள்ளூர் தயாரிப்பான அரிசி, முட்டை, புதிய பன்றி இறைச்சி, மைலோ பானம், பால், சுத்திகரிப்புத் தூள் ஆகிய பொருள்கள் அவற்றுள் அடங்கும்.
ஒப்புநோக்க அதன் 10 வாடிக்கையாளர்களில் ஒன்பதுபேர் மாதந்தோறும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நீலம் அல்லது ஆரஞ்சு நிற அட்டைகள் வைத்துள்ளோர் அதிகம் உள்ளனர் என்று எஃப்பிஜி குழுமம் விளக்கியது.
அவர்களே குழுமத்தின் விற்பனையில் உள்ள 100க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவோர் ஆவர்.
எஃப்பிஜி குழுமத்தின் தொண்டு நடவடிக்கைகளுக்குக் கைகொடுக்கும் அதன் ஃபேர்பிரைஸ் அற நிறுவனப் பிரிவு, இந்தச் செயல்பாட்டுக்கான நிதி ஆதரவை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த 1970ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியைச் சமாளிக்க ஒருங்கிணைந்த கூட்டுறவுப் பேரங்காடியாக உருவாக்கப்பட்ட என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம் அதன் அடிப்படை இலக்கை கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளது,” என்று குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சவ்லா வலியுறுத்தினார்.
அதன்படி, அடிப்படை உணவுகளின் விலைகளைக் கட்டுப்படியாக வைத்துக்கொள்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. சந்தை நிலவரம் எப்படி இருந்தாலும் உணவின் தரம் சுகாதாரமானதாக, ஊட்டச் சத்து நிறைந்ததாக இருக்கும் எனவும் திரு சாவ்லா உறுதி செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
“விலைகளை ஒரே நிலையில் வைத்து வாரம் இரண்டு முறை சாஸ் சலுகை அட்டையுள்ளோருக்கு சலுகைகளை இரட்டிப்பாக்குவது நிச்சயமற்ற நேரத்தில், சிங்கப்பூரர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் நாங்கள் செயல்படுகிறோம்,” என்றார் திரு சாவ்லா.

