எரிவாயு எண்ணெய் சட்டவிரோதமாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டதன் தொடர்பில் கைதான எட்டு ஆடவர் மீது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
அவர்கள் 25க்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். வியாழக்கிழமை அதிகாலை மணி 1.05க்குத் துவாஸ் கடற்பகுதியில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இழுவைப் படகில் காவல்துறையின் கடலோரக் காவற்படை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவர்கள் பிடிபட்டனர்.
கைதானோர், இழுவைப் படகின் சிப்பந்திகள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த எட்டுப் பேரும், அவர்களின் நிறுவனத்திற்குத் தெரியாமல் கிட்டத்தட்ட $10,570 மதிப்புள்ள எரிவாயு எண்ணெயைக் கையாடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் அவர்களின் சொந்த ஆதாயத்திற்காகச் சட்டவிரோதமாய் விற்கப்பட்டதும் தெரியவந்தது.
முதலாளியின் சொத்தை ஊழியர்கள் திருடிய குற்றத்திற்காக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதமும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.



