செம்பவாங் வட்டார உணவங்காடி நிலையக் கடை ஒன்றில் இன்று காலை தீ மூண்டது. அப்போது அந்தக் கடையில் யாரும் இல்லை எனக் கூறப்பட்டது.
புக்கிட் கேன்பரா உணவங்காடி நிலையத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள கடையின் சமையலறையில் அடுப்பு, புகைபோக்கி ஆகியவற்றில் தீ பற்றி எரிந்தது.
சம்பவம் குறித்து காலை 9.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னரே, பொதுமக்கள் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைத்துவிட்டதாகவும் தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அது கூறியது.
‘லொங் ஸியாங் ஹோ சியாக் சிஸர்ஸ் கட் கரி ரைஸ்’ எனும் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், தீ மூண்டபோது கழிப்பறையில் இருந்ததாகத் தெரிகிறது. கடை எப்போது மீண்டும் திறக்கப்படுமெனத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
காலை பத்து மணியளவில், எரிந்துபோன அக்கடை காலியாக இருந்ததாக ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் கூறியது.