மின்சிகரெட் பயன்படுத்தியதால் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்ட மூவரில் ஒரு 11 வயது சிறுவனும் அடங்குவார்.
பொங்கோல் வட்டாரத்தில் மின்சிகரெட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் ஒரு 17 வயதான பதின்ம வயது சிறுவன் எட்டோமிடெட் போதைப்பொருள் உபயோகித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான். காவல்துறையும் சுகாதார அறிவியல் ஆணையமும் இந்த நடவடிக்கைகளை ஏப்ரல் 30ஆம் தேதி நடத்தின.
மின்சிகரெட் குற்றங்களுக்காகப் பிடிபட்டோரில் 11 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இரு ஆடவர்களும், ஒரு மாதும் உட்படுவர் என்று ஆணையம் புதன்கிழமை (மே 13) தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட அந்த 17 வயது சிறுவனின் சிறுநீர் சோதனையில் அவர் இரண்டாவது முறையாகப் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டது என்று ஆணையம் கூறியது.
நான்கு மின்சிகரெட் சாதனங்களும் அவற்றுக்கான உபகரணங்களும், எட்டோமிடெட் கலந்ததாக சந்தேகிக்கப்படும் ‘கேபாட்’ கருவி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கேபாட் சாதனம் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன
சிங்கப்பூரில் 2025 மே 1ஆம் தேதி முதல் மின்சிகரெட் குற்றங்களுக்குக் கடுமையான புதிய தண்டனைகள் அமலுக்கு வந்தன.
மின்சிகரெட் குற்றம் புரிந்து பிடிபடுவோருக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படும். எட்டோமிடெட் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் குற்றத்துக்கு $20,000 அபராதத்துடன் 10 ஆண்டு சிறை அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம்.

