காஸாவில் பிறந்த பாலஸ்தீனப் பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போரில் தத்தளித்த காஸாவுக்குச் சிங்கப்பூரும் பல உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று லவ் எய்ட் சிங்கப்பூர் (Love Aid Singapore) தொண்டூழிய அமைப்பின் உணவு நிலையம். அங்கு உணவுகள் தயாரிக்கப்பட்டு காஸா மக்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த உணவு நிலையத்தில் குழந்தையின் தந்தையான ஹம்தன் ஹடாட் சமையல்காரராக வேலை செய்தார்.
இக்கட்டான நேரத்தில் உதவி வழங்கியதால் சிங்கப்பூருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஹடாட் தமது பிள்ளைக்கு ‘சிங்கப்பூர்’ எனப் பெயரிட்டுள்ளார்.
குழந்தை அக்டோபர் 16ஆம் தேதி பிறந்ததாக லவ் எய்ட் சிங்கப்பூர் தனது சமூக ஊடக கணக்குகளில் தகவல் வெளியிட்டது.
திரு ஹடாட் லவ் எய்ட் சிங்கப்பூர் உணவு நிலையத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வேலை செய்துள்ளார்.
“மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில் சிங்கப்பூர் உணவு நிலையத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்டார். போரால் துவண்ட காஸாவில் பசியும் பஞ்சமும் இருந்த நேரத்தில் உணவு கொடுத்து நிலையம் உதவியது,” என்றார் ஹடாட்.
குழந்தை பிறக்கும்போது 2.7 கிலோ கிராம் எடையில் இருந்தது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழிலும் ‘சிங்கப்பூர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

