‘பிசியோதெரப்பிஸ்ட்’ எனப்படும் இயன்முறை சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் அவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டுக்கும் மேல் அதிகமாகி உள்ளது.
எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை, அவர்கள் பொதுத் துறையில் பணிபுரிவதைக் காட்டிலும் தனியார் சுகாதாரப் பராமரிப்புத் துறை மீதே அதிக நாட்டம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் தனியார் துறையில் வேலை செய்வதாக சுகாதார நிபுணத்துவ சார்பு மன்றம் கடந்த ஆண்டு வெளியிட்ட வருடாந்தர அறிக்கையில் தெரிவித்திருந்தது.
2025 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, தனியார் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள், மருத்துவ நிலையங்கள் மற்றும் மருத்துவ ஆய்வு நிலையங்களில் 916 இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் பணியாற்றினர். அத்தகைய நிபுணர்களின் மொத்த எண்ணிக்கையில் அது 31.1 விழுக்காடு.
2021ஆம் ஆண்டு அந்த விகிதம் 25.5 விழுக்காடாக இருந்தது. அதாவது, இந்த இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் 339 நிபுணர்கள் அதிகமாக தனியார் துறையில் சேர்ந்துள்ளனர்.
அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க, பொதுத் துறை மருத்துவ அமைப்புகளில் 176 பேர் மட்டுமே அதிகமாகச் சேர்ந்தனர். 2025 டிசம்பர் 31ஆம் தேதியன்று 1,130 பேர் பொதுத்துறை இயன்முறை சிகிச்சை நிபுணர்களாக இருந்தனர்.
2021ஆம் ஆண்டு பொதுத் துறையில் அவர்களின் விகிதம் 42.2 விழுக்காடு இருந்த நிலையில் 2025ஆம் ஆண்டு அது 38.3 விழுக்காட்டுக்கு இறங்கியது.
இதே நிலை தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் தனியார் துறை நிபுணர்களின் எண்ணிக்கை பொதுத் துறை நிபுணர்களின் எண்ணிக்கையைத் தாண்டக்கூடும்.
அவ்வாறு நிகழ்ந்தால், நோயாளிகள் சலுகைக் கட்டணத்தில் இயன்முறை சிகிச்சை சேவைகளைப் பெறுவதில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், தற்போது வரை எந்த ஒரு பாதிப்பும் இல்லை என சிங்கப்பூரின் மூன்று முக்கியச் சுகாதாரச் சேவை அமைப்புகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளன.
என்எச்ஜி ஹெல்த், சிங்ஹெல்த், தேசியப் பல்கலைக்கழக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகள் அவை.
இந்நிலையில், இயன்முறை சிகிச்சை நிபுணர்களில் இத்தனை பேர்தான் பொது அல்லது தனியார் துறையில் வேலைசெய்ய வேண்டும் என்ற உச்சவரம்பு கிடையாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, அவர்கள் பொதுத்துறையிலிருந்து வெளியேறும் விகிதம் 2025ல் 10 விழுக்காடாக இருந்தது. 2022ஆம் ஆண்டில் இருந்த 12.1 விழுக்காட்டைவிட குறைவுதான் என அமைச்சு மேலும் கூறியது.

