விமானி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வரவேண்டிய விமானம் சனிக்கிழமை (மார்ச் 29ஆம் தேதி) ஆறு மணிநேரம் தாமதமாகக் கிளம்பியது.
எஸ்கியூ 899 விமானம் சிங்கப்பூருக்கான தனது பயணத்தை சனிக்கிழமை காலை தொடங்கியது. ஆனால், அது நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலிருந்து விமான ஓடுபாதையை நோக்கிச் செல்லும்போது விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், விமானம் அது நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று என்று கூறப்படுகிறது.
செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளித்த எஸ்ஐஏ நிறுவனம், விமானிக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டியிருந்ததால் நீண்டநேர தாமதம் அவசியமானதாகக் கூறியது.
இது குறித்து எஸ்ஐஏ தனது இணையத்தளத்தில் வெளியிட்ட தகவலில் விமானம் சனிக்கிழமை காலை 9.05க்கு கிளம்புவதாக இருந்தது. எனினும், பின்னர் மதியம் 3.40 மணிக்குதான் அந்த விமானம் புறப்பட்டது. அதனால், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்துக்கு அது ஆறு மணிநேரம் தாமதமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பானம், உணவு போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் இரவு 7.36க்கு தரை இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.