ரத்தினக் கற்கள் முதலீட்டுத் திட்டத்தில் பணம் போட்ட முதலீட்டாளர்கள் பணத்தைக் கேட்டு உபி டெக்பார்க்கில் அமளியில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து, அங்கு அமைதியை நிலைநாட்ட காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
முதலீட்டு நிறுவனம் தங்களைப் பல ஆண்டுகளாகப் புறக்கணித்து ஏமாற்றி வருவதாக முதலீட்டாளர்கள் குறைகூறினர்.
ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று, உபி கிரசெண்ட்டில் உள்ள உபி டெக்பார்க்கின் நான்காவது மாடியில் உள்ள அலுவலகத்துக்கு ஏறத்தாழ 10 பேர் சென்றனர்.
மிகுந்த கோபத்துடன் அங்கிருந்த மேசைகளை அடித்து நிறுவனத்தின் ஊழியர்களைப் பார்த்து அவர்கள் கத்தினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குக் காவல்துறையினர் விரைந்தனர்.
முதலீட்டாளர்கள் புகார் செய்ததை அடுத்து, அதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
கிட்டத்தட்ட 100 முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் பணம் போட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் ஒய்வுபெற்ற முதியோரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டுத் திட்டம் அம்பர் ரத்தினக் கற்களுடன் தொடர்புடையவை.
திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று முதலீட்டு நிறுவனம் தங்களுக்கு உறுதி அளித்ததாக முதலீட்டாளர்கள் கூறினர்.
இத்திட்டத்துடன் தொடர்புடைய USFIA சிங்கப்பூர், குளோப் ஜிசி ஆகிய நிறுவனங்கள் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் எச்சரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


