சிங்கப்பூரின் ‘சைம்ஸ்’ கட்டடத்தில் பாதுகாவல் அதிகாரி ஒருவரைத் தாக்கிய சந்தேகத்தின்பேரில் 32 வயது ஆடவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அக்டோபர் 5ஆம் தேதி பின்னிரவு 3.15 மணிவாக்கில் 30 விக்டோரியா ஸ்திரீட்டில் நடந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த 61 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக அவர்கள் கூறினர்.
திரு அப்துல் தாலிப் ஏ. முகம்மது என்ற அப்பாதுகாவல் அதிகாரி, ‘சைம்ஸ்’ கட்டடத்தில் பணியில் இருந்தபோது, தகராறு நடந்ததைக் கண்டார். அங்குள்ள உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் உதவிகோரி அவரை அழைத்திருந்தார்.
திரு அப்துல் தாலிப் விரைந்து அப்பெண்ணை நோக்கிச் சென்றபோது, அந்தச் சந்தேகப் பேர்வழி அவரை அணுகி, காரணமின்றி அவரின் தலையில் குத்தியதாக பாதுகாவல் ஊழியர் சங்கம் கூறியது.
அதனைத் தொடர்ந்து, திரு அப்துல் கீழே மயங்கி விழுந்ததாக அது தெரிவித்தது.
திரு அப்துல் தாலிபின் மருத்துவச் செலவுகளுக்குக் கைகொடுத்து வருவதாகவும் அது கூறியது.