ஜூன் 26ஆம் தேதி தஞ்சோங் பகாரில் ஒரு விபத்து நடந்த இடத்தை விட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரையும் பயணியையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஜூன் 26 அன்று தஞ்சோங் பகார் ரோடு, குக் ஸ்திரீட் சந்திப்பில் இரண்டு கார்களும் ஒரு டாக்சியும் மோதிக் கொண்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் மாலை சுமார் 6.30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
68 வயதான டாக்சி ஓட்டுநரும் ஒரு காரின் ஓட்டுநரான 60 வயது ஆடவர் ஆகிய இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு வரும் முன்பே, மற்றொரு காரின் ஓட்டுநரும் பயணியும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் இருவரையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.