தடுப்பூசிக்கு எதிரான ‘ஹீலிங் தி டிவைட்’ குழுவின் நிறுவனர் ஐரிஸ் கோவுக்கும், தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் எம்.ரவி என்றழைக்கப்படும் ரவி மாடசாமிக்கும் எதிராக உதவித் தலைமைத் தேர்தல் அதிகாரி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
அண்மைய அதிபர் தேர்தலில் திரு டான் கின் லியானுக்கு ஆதரவு தெரிவித்த அவ்விருவரும் தேர்தல் பிரசார ஓய்வு நாளின்போது இணையத்தில் மீண்டும் மீண்டும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான பிரசார ஓய்வு நாளின்போது கட்டணம் செலுத்தப்பட்ட அல்லது கட்டணம் செலுத்தப்படாத தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவது சட்டத்துக்குப் புறம்பானது.
இவ்வாண்டின் பிரசார ஓய்வு நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதி இரவு 8 மணிவரை நீடித்தது.
பிரசார நடவடிக்கைகளுக்கும் தேர்தல் விளம்பரங்களுக்கும் அனுமதி இல்லை என்று நினைவூட்டப்பட்டபோதும், கோவும் ரவியும் வேட்பாளர் ஒருவரின் வெற்றியைத் தூண்டக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய கருத்துகளை வெளியிட்டதாகத் தேர்தல் துறை குறிப்பிட்டது.
பிரசார ஓய்வு நாளன்று கோ அத்தகைய கருத்துகளைக் கொண்ட இரண்டு காணொளிகளை டிக்டாக்கில் வெளியிட்டிருந்தார்.
ரவி, வாக்களிப்பு நாளன்று அத்தகைய கருத்துகளைக் கொண்ட ஐந்தாவது காணொளியையும் பதிவு ஒன்றையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.
அதிபர் தேர்தல் சட்டம் 42சி பிரிவின்கீழ், புரிந்திருக்கக்கூடிய உத்தேசக் குற்றங்களுக்காக கோவுக்கும் ரவிக்கும் எதிராக உதவித் தலைமைத் தேர்தல் அதிகாரி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
பிரசார ஓய்வு நாளின்போது தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், $1,000 வரை அபராதம், 12 மாதங்கள்வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மேல்விவரங்களுக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ், காவல்துறையைத் தொடர்புகொண்டது.