கோலாட்டம், பறையாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், உறியடி.
இவை அத்தனையும் செங்காங் வட்டாரத்தில் ஜனவரி 19ஆம் தேதியின்போது ஏங்கர்வேல் சமூக மன்றத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் அங்கம் வகித்தன.
ஏங்கர்வேல் சமூக மன்ற நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காலை சுமார் எட்டு மணியளவில் பொங்கல் வைக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
செங்காங் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செங்காங் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான டாக்டர் லாம் பின் மின், நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். பறை இசை முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வந்திருந்தோருக்குக் காலை உணவு, தேநீர், கருப்பஞ்சாறு, அன்பளிப்புப் பைகள் ஆகியவை வழங்கப்பட்டன.
ஏங்கர்வேல் சமூக மன்ற நற்பணிச் செயற்குழுவின் தலைவர் முனைவர் கலவகுண்டா ஸ்ரீதர் தலைமையில் துணைத் தலைவர் ராஜா பொன்னாடை போர்த்தி, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மணிவண்ணன் மலர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.
சிறார்களுக்கும் இளையர்களுக்குமான பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
நற்பணி உறுப்பினர்கள் கோமதி பிரியா, கணேஷ், மாலிக் ஆகியோர் நிகழ்ச்சி நெறியாளர்களாகச் இருந்தனர்.
கடந்த பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்தக் கொண்டாட்டம், முதன்முறையாக செங்காங் சமூக மன்றத்தின் சுற்றுவட்டாரத்திலும் நடைபெற்றதாக முனைவர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
“வழக்கமான பல்பயன் அறைகளுக்கு அப்பாற்பட்டு நாங்கள் இந்த நிகழ்ச்சியைப் பேரளவில் நடத்தியுள்ளோம். பொங்கல் பற்றி மட்டுமின்றி கிராமியக் கலைகள் குறித்த விழிப்புணர்வையும் இந்தக் கொண்டாட்டத்தின் மூலம் ஏற்படுத்த முடிந்தது,” என்று முனைவர் ஸ்ரீதர் கூறினார்.