ஈசூன் அவென்யூ 6ல் உள்ள புளோக் 461Aயின் நான்காம் மாடியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இரவு 7.25 மணியளவில் திடீரென தீப்பிடித்துவிட்டது.
அச்சம்பவத்தில் தீயணைப்புப் படையினர் அங்கு வருவதற்கு முன்பாக அண்டை வீட்டைச் சேர்ந்த இளையர் ஒருவர், அந்த மாடியின் அருகில் இருந்த தண்ணீர்க் குழாயுடன் துணிச்சலாக வீட்டுக்குள் நுழைந்தார்.
எரிந்துகொண்டிருந்த தீயை அவர் நீரைப் பீய்ச்சி அடித்து அது மேலும் பரவாமல் தடுத்து அணைத்தார். பக்கத்து வீட்டாருக்கு உதவ மிகவும் துணிச்சலுடன் அவர் புரிந்த செயலை இணையத்தில் பலர் பாராட்டிவருகின்றனர்.
தீரம் நிறைந்த அந்த இளையரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீ ஏற்பட்ட காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடர்கிறது. படுக்கை அறையில் இருந்த மெத்தை விரிப்பில் தீப்பற்றியதாகத் தெரிகிறது.
பேராபத்தைத் தடுத்த அந்த இளையரின் செயலைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த புளோக்கின் எதிரில் வாழும் ஒருவரும் தீ எரியும் காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் உடனடியாக செயல்பட்ட அந்த இளையரையும் அவரது தந்தையையும் அவர் பாராட்டினார்.

