இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் அறிவித்துள்ளார்.
“இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் தாம் போட்டியிடப்போவதில்லை. இது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு,” என்று திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
“கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகச் சேவையாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். என்னால் முடிந்த அளவு சிறப்பாகக் கடமையாற்றியுள்ளேன். பரிவான, கருணைமிக்க சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கமாக இருந்தது," என அதிபர் ஹலிமா கூறியுள்ளார்.
அதிபர் ஹலிமாவின் பதவிக்காலம் இவ்வாண்டு செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
சிங்கப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடக்கும். எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மலாய் இனத்தவருக்காக 2017ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் ஒதுக்கப்பட்டது. அதில் திருவாட்டி ஹலிமா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு, செப்டம்பர் 14ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றார்.
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் எனும் பெருமை இவரைச் சேரும்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் அனைத்து இனத்தவரும் போட்டியிடலாம்.