கடந்த 23 ஆண்டுகளாக சமூக நோக்கங்களுக்காக நிதி திரட்ட உதவியிருக்கும் அதிபர் சவால் மறுஆய்வு செய்யப்படும்.
2025ஆம் ஆண்டிலிருந்து விளையாட்டு, கலைத் திறன்களை உள்ளடக்கும் வகையில், அதன் நோக்கம் விரிவுபடுத்தப்படும்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் மே 30ஆம் தேதி ‘கேம்பஸ்இம்பேக்ட்’ சமூக சேவை அமைப்புக்குச் சென்றிருந்தபோது, 2024ஆம் ஆண்டு அதிபர் சவாலின் தொடக்க விழாவில் அதனை அறிவித்தார்.
அடுத்த ஆண்டின் அதிபர் சவால், பொது, கொடை அமைப்புகளுடனான பங்காளித்துவங்களின் மூலம் விரிவுகாணும் என்றும், நீடித்த சமூகத் தாக்கத்தை அடைய நோக்கம் கொண்டிருக்கும் என்றும் அதிபர் சவாலின் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
இவ்வாண்டின் பிற்பாதியில் மேல்விவரங்கள் அறிவிக்கப்படும்.
சென்ற ஆண்டின் அதிபர் சவால் $14 மில்லியனுக்கும் மேல் நிதி திரட்டியது. 86 சமூக சேவை அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. 23,000க்கும் அதிகமான தனிநபர்களும் குடும்பத்தாரும் நிதித்திரட்டு, தொண்டூழிய முயற்சிகளிலிருந்து பயன்பெற்றனர்.
இவ்வாண்டு, 65 சமூக சேவை அமைப்புகளுக்கு அவற்றின் நடவடிக்கைகளுக்காக நிதி ஆதரவு வழங்கப்படும்.
‘லுத்தரன் சமூகப் பராமரிப்புச் சேவைகள்’ குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு நடத்தும் திட்டம் ஒன்றும், மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ள தனிநபர்களை ஆதரிக்கும் ‘சால்ட் கேர்’ அமைப்பும் அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
உதவி தேவைப்படும் இளையோருக்கு உதவும் ‘கேம்பஸ்இம்பேக்ட்’, பயன்பெறும் அமைப்புகளில் ஒன்று.

