மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாடு நவம்பர் 24ஆம் தேதி இடம்பெறவுள்ளது. அதில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரை நிகழ்த்த உள்ளார்.
‘ஜி20’ மாநாட்டை அடுத்து சிங்கப்பூர் ஊடகத்துறையுடனான நேர்காணலில் கட்சியின் மாநாடு குறித்து திரு வோங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நிகழ்வுக்கான தமது உரையை இனி தயாரிக்க உள்ளதாக திரு வோங் பதிலளித்தார்.
ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், கட்சி உறுப்பினர்கள் ஒன்றுதிரண்டு வந்து தங்களின் புதிய மத்திய செயற்குழுவினரைத் தேர்ந்தெடுப்பர்.
ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கும் முன்னதாக வேட்பாளர்களாகப் போட்டியிடக்கூடிய திறன்வாய்ந்தவர்களை இந்தக் குழு தீர்மானிக்கும். எந்தெந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெறலாம் என்பது குறித்தும் இக்குழு முடிவெடுக்கும்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தற்போது மசெகாவின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்தப் பதவியை நவம்பர் 24ஆம் தேதிக்குப் பிறகு பிரதமர் வோங் ஏற்பாரா என்னும் கேள்வி நிலவுகிறது.
இதற்கிடையே, வரவுசெலவுத் திட்டம் 2025 தொடர்பில் பல பணிகள் தொடங்கிவிட்டதாக பிரதமர் வோங் தெரிவித்தார்.

