ஜப்பான் பிரதமர் தக்காய்ச்சிக்கு, பிரதமர் வோங் வாழ்த்து

ஜப்பான் பிரதமர் தக்காய்ச்சிக்கு, பிரதமர் வோங் வாழ்த்து

2 mins read
சிங்கப்பூர்-ஜப்பான் 60 ஆண்டுகாலத் தூதரக உறவுகள்
bf5ede8e-fc00-4bcc-ab7b-6b32ca5cea18
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (இடது), ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியை மார்ச் 18ஆம் தேதியன்று தோக்கியோவில் நடைபெற்ற இருதரப்பு உச்சநிலை மாநாட்டில் சந்தித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டுகாலத் தூதரக உறவுகளைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 26) ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

நிதி அமைச்சருமான பிரதமர் வோங், திருவாட்டி தக்காய்ச்சிக்கு எழுதிய கடிதத்தில், சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு ‘ஒரு வலுவான மற்றும் பன்முகப் பங்காளித்துவமாக வலுவடைந்துள்ளது’ என்றும், அவற்றின் பொருளியல் பங்காளித்துவம் ஒரு முக்கியத் தூணாக இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் ஆரம்பகால வளர்ச்சிக்கு ஜப்பானிய முதலீடும் தொழில்நுட்பமும் கணிசமாகப் பங்களித்தன என்றும், 2002ல் கையெழுத்திடப்பட்ட ஜப்பான்-சிங்கப்பூர் பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரு நாடுகளும் தற்போது ஒன்று மற்றொன்றின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளாகவும் முதலீட்டாளர்களாகவும் விளங்குகின்றன என்றும் அவர் கூறினார்.

திரு வோங், மார்ச் மாதம் தாம் ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தையும் குறிப்பிட்டு, அதனை ‘ஒரு முக்கியமான மைல்கல்’ என்று வர்ணித்தார்.

ஆசியான் மையத்துவம் மற்றும் வட்டார ஒருங்கிணைப்புக்கு ஜப்பான் ஓர் உறுதியான ஆதரவாளராக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

2027ல் சிங்கப்பூர், ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக, ஆசியான்-ஜப்பான் உரையாடல் உறவுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சிங்கப்பூர், ஆசியான்-ஜப்பான் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

“திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வட்டாரக் கட்டமைப்பை ஆதரிக்கும் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் கண்ணோட்டத்திற்கும் ஜப்பானின் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கொள்கைக்கும் இடையிலான ஒருங்கிணைப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று திரு வோங் கூறினார்.

விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் மற்றும் வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவம் போன்ற ஒத்துழைப்பு முயற்சிகளை சிங்கப்பூரும் ஜப்பானும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டு முயற்சிகள், விதிகள் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்கை நிலைநிறுத்தவும், வட்டார அமைதி, நிலைத்தன்மை, பகிரப்பட்ட செழிப்பை வளர்க்கவும் உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“நமது பங்காளித்துவத்தை இன்னும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல, உங்களுடனும் உங்கள் அரசாங்கத்துடனும் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் வெற்றியுடனும் இருக்கவும், ஜப்பானிய மக்கள் தொடர்ந்து அமைதியுடனும் செழிப்புடனும் வாழவும் வாழ்த்துகிறேன்,” என்று திரு வோங் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்