பிரதமர் லாரன்ஸ் வோங், தைப்பூசத் திருநாளைக் கடைப்பிடிக்கும் இந்துக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) இன்ஸ்டகிராமில் பதிவிட்ட அவர் இந்து சமூகத்தினர் பலருக்கும் தைப்பூசம் என்பது சமய நம்பிக்கை மற்றும் சுயசிந்தனைக்கான ஒரு முக்கியமான நாள் என்பதைச் சுட்டினார்.
வழிபாடு, விரதம் இருத்தல், காவடிகளையும் பால்குடங்களையும் சுமப்பதன் மூலம் இத்திருநாள் ஆழ்ந்த பக்தி, கட்டுப்பாடு மற்றும் நன்றியுணர்வோடு கடைப்பிடிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
“இந்த நாளில் வெளிப்படும் அமைதியான மனவலிமையும் விடாமுயற்சியும் நாம் அனைவரும் போற்றக்கூடிய பணிவு, மீள்திறன், பிறருக்குச் சேவையாற்றுதல் போன்ற பண்புநலன்களை வெளிப்படுத்துகின்றன.
“தைப்பூசத்தைக் கொண்டாடும் அனைவருக்கும், தங்களது குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் ஆசி நிறைந்த, அர்த்தமுள்ள திருநாள் அமைய வாழ்த்துகள்,” என்றார் பிரதமர் வோங்.

