டாக்சி, வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள், தனியார் வாடகை கார் மற்றும் டாக்சி ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் சங்கங்கள், அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே அண்மைய சந்திப்பு நடத்தப்பட்டது.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கு உதவ ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிப்பது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்போது ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் உடனடியாக தகவல் அளிப்பது போன்ற யோசனைகள் குறித்து அதில் கலந்தாலோசிக்கப்பட்டதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அலுவலகத்தில் கடந்த நவம்பரிலிருந்து நடத்தப்பட்டு வரும் சந்திப்புகள், டாக்சி மற்றும் வாடகை கார் சேவைத் துறை சார்ந்த கட்டமைப்புகளையும் விதிகளையும் மறுஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக அமைந்தன.
கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட அந்த மறுஆய்வு, அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டிற்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்சி, தனியார் வாடகை கார் விதிகளைச் சீரமைப்பது, ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கனிவான நடத்தையை ஊக்குவிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டதாக புதன்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் கோர் கூறினார்.
சந்திப்புகளின்போது முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து அவர் விவரிக்கவில்லை. அச்சந்திப்பில் பங்கேற்ற மற்றவர்களும் அதுகுறித்து கருத்துரைக்க மறுத்துவிட்டனர்.
இந்த மறுஆய்வின் ஓர் அங்கமாக டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகள் நாள் முழுவதும் கிடைக்கும் நிலையை மேம்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. நிறுவனங்கள் குறைந்தபட்ச இடையூறுடன் சேவைகள் வழங்க முடிவதை உறுதிசெய்யவும் அரசாங்கம் முற்படுகிறது.
டாக்சி ஓட்டுநர்களைவிட இருமடங்கு தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் இருப்பதாக டாக்டர் கோர் தெரிவித்தார். டாக்சி ஓட்டுநர்கள் பலரும் வாடகை கார் சேவைக்கான முன்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
பயணிகள், ஓட்டுநர்கள் இருதரப்பினரின் பலதரப்பட்ட தேவைகளை ஒழுங்குமுறைக் கட்டமைப்பு தொடர்ந்து பூர்த்திசெய்வதை உறுதிசெய்வதில் இந்த மறுஆய்வு சரியான நேரத்தில் இடம்பெறுவதாக டாக்டர் கோர் சொன்னார்.
மறுஆய்வின் ஒரு பகுதியாக ஓட்டுநர்கள், பயணிகள், கல்வியாளர்களைச் சென்றடைவதில் நிலப் போக்குவரத்து ஆணையம் முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.