இவ்வாண்டின் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் (பிஎஸ்எல்இ) தேர்வு முடிவுகள் நவம்பர் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் புதன்கிழமை (நவம்பர் 13) இணைந்து ஒரு கூட்டறிக்கை மூலம் இதனைத் தெரிவித்தன. மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வதன் தொடர்பிலான விவரங்களை மாணவர்கள், தங்கள் பள்ளிகளிடமிருந்துப் பெறலாம். தங்களால் பள்ளிக்குச் சென்று முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோர் நவம்பர் 22ஆம் தேதியன்று தங்கள் சார்பில் வேறொருவரை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
தகுதிபெறும் மாணவர்களுக்கு, பிஎஸ்எல்இ முடிவுகளுடன் உயர்நிலைப் பள்ளிகளைத் தேர்வுசெய்வதற்கான உயர்நிலை 1 (எஸ்) தெரிவுப் படிவமும் (Option form) வழங்கப்படும்.
நவம்பர் 20ஆம் தேதி காலை 11.30 மணி முதல் நவம்பர் 26 பிற்பகல் மூன்று மணிக்குள் இணையம்வழி எஸ்1 ஆவணத்தை நிரப்பி சமர்ப்பிக்கவேண்டும். உதவி தேவைப்படும் பெற்றோர் நவம்பர் 26 பிற்பகல் மூன்று மணிக்குள் பள்ளிகளை நாடலாம்.
மாணவர்களுக்கு எந்த உயர்நிலைப் பள்ளி கிடைத்தது என்ற தகவல் டிசம்பர் 18லிருந்து 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது. எஸ்1 இணைய முறையின் மூலம் அல்லது மாணவரின் தொடக்கப் பள்ளியிடமிருந்தும் அத்தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும்.