சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் பொது எச்சரிக்கை ஒலி செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு ஒரு நிமிடம் வரை ஒலிக்கப்பட உள்ளது. வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும் முக்கியமான செய்திகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்வதே இந்த சமிக்ஞையின் முக்கிய நோக்கமாகும்.
கூடுதலாக, எஸ்ஜிசெக்யூர் கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள பொதுமக்களின் திறன்பேசிகளிலும் இந்த எச்சரிக்கை ஒலி 20 நொடிகளுக்கு நீடிக்கும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 3) அறிவித்தது.
அத்துடன் பொது எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்படுவது தொடர்பான ஒரு குறுஞ்செய்தியும் அதில் இடம்பெறும். கைப்பேசிகளில் இந்த எச்சரிக்கை சமிக்ஞையையும் குறுஞ்செய்தியையும் பெற வேண்டுமாயின், எஸ்ஜிசெக்யூர் செயலியின் அறிவிப்பு மற்றும் விழிப்பூட்டல் அம்சங்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், சிங்டெல் இணையக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களும் தங்களது கைப்பேசிகளில் எஸ்ஜி அலர்ட் தகவலைப் பெறுவார்கள் என்று எஸ்ஜிசெக்யூர் சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


