பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி, சிங்கப்பூரின் அரிய பேருந்துச் சேவை எண் 405 இவ்வாண்டு எந்தெந்த நாள்களில் இயங்கும் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.
பேருந்துச் சேவை எண் 405, ஆண்டில் ஏழு முறை மட்டுமே செயல்படும் என்பதால் அது அரியது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. சின் மிங் திருவிழா, புனித வெள்ளி, ரமலான் மாதத் தொடக்கம், நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், தீபாவளி, ஆன்மாக்கள் தினம் ஆகியவையே அந்த நாள்கள்.
லிம் சூ காங் ரோட்டின் மறுசீரமைப்புக்குப் பிறகு, சென்ற ஆண்டு (2025) அந்தச் சேவையின் பயணப் பாதையில் மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வாண்டு முதன்முறையாக, பேருந்துச் சேவை எண் 405, இம்மாதம் (பிப்ரவரி) 19ஆம் தேதி இயங்கும். அன்று ரமலான் மாதத்தின் முதல் நாள்.
அதன் பிறகு, மார்ச் 21ஆம் தேதி நோன்புப் பெருநாளின்போதும் அதற்கு அடுத்த நாள் 22ஆம் தேதி சின் மிங் திருவிழாவின்போதும் அது செயல்படும்.
பேருந்துச் சேவை 405 இயங்கும் நாள்களில், காலை ஏழு மணிக்குத் தொடங்கி 22 முதல் 30 நிமிட இடைவெளியில் தொடர்ந்து மாலை ஐந்து மணி வரை செயல்படும்.

