சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநரான திரு ரவி மேனன், அந்தப் பொறுப்பில் மேலும் இரண்டு ஆண்டு களுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
திரு மேனனுக்கு இந்த ஆண்டு வயது 59 ஆகிறது. அவர் அந்தப் பொறுப்பில் 2011ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
அவரின் தற்போதைய பதவிக்காலம் இந்த மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அத்துடன் அவர் ஆணையத்தில் இருந்து விலகிவிடுவார் என்று ஊகச் செய்திகள் தெரிவித்தன.
ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் ஆக அதிக காலம் இருந்து வரும் திரு மேனன், பொதுச் சேவையில் இருந்து ஓய்வுபெறும் வரை அல்லது 2025ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை அந்தப் பொறுப்பில் மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று ஆணையம் தனது அறிக்கையில் நேற்று தெரிவித்தது.
திரு மேனன் ஆணையத்தின் நிர்வாகச் சபை உறுப்பினராக ஜூன் 1ஆம் தேதி முதல் 2025 மே 31ஆம் தேதி வரை மீண்டும் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கை தெரிவித்தது.
தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங், ‘நெட்லிங்க் என்பிஎன் மேனேஜ்மெண்ட்’ நிறுவனத்தின் தலைவரான சாலி மா இருவரும் ஆணையத்தின் நிர்வாகச் சபை உறுப்பினராக 2026 மே 31ஆம் தேதி வரை மூன்றாண்டு காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.