பயிற்சிக்காகவோ மருத்துவ அல்லது அவசர விடுப்புக்காகவோ செல்ல சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
தேவைப்படும்போது பணியில் அமர்த்தப்படக்கூடிய பகுதிநேர ஆசிரியர்கள் கட்டமைப்பை அமைக்க, கல்வி அமைச்சு சிறப்புக் கல்விப் பள்ளிகளுடனும் சமூக சேவை அமைப்புகளுடனும் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பயனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டான் கேட்ட கேள்விக்கு திரு சான் பதில் அளித்துப் பேசினார்.
ஆசிரியர்களை மேம்பட்ட முறையில் பணியில் அமர்த்தவும், அவர்களின் மனிதவள நிர்வாகத்தையும் செயல்முறைகளையும் மேம்படுத்தவும் கல்வி அமைச்சு சிறப்புக் கல்விப் பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் என்றார் திரு சான்.
சாதாரணப் பள்ளி ஆசிரியர்களும், சிறப்புக் கல்வி ஆசிரியர்களும் ஒருவர் மற்றொருவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதன் தொடர்பில் அமைச்சு செயல்படும் என்றும் அவர் கூறினார்.
உள்ளமைப்பு ஆதரவிலும் நிர்வாகத்திலும் மேலும் மேம்படுவதற்கான வழிகளைக் கண்டறிய, அமைச்சு சமூக சேவை அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றும் என்றார் திரு சான்.
சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், தலைவர்களின் நிபுணத்துவ வளர்ச்சியும் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
ஆசிரியர்களின் நலனுக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கில், சிறப்புக் கல்வித் துறையில் கல்வி அமைச்சு மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியே, இந்த நடவடிக்கைகள் என்று திரு சான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிறப்புக் கல்வி பகுதிநேர ஆசிரியர்கள் கட்டமைப்பை அமைப்பதில் சிரமங்கள் உள்ளதை ஒப்புக்கொண்ட அமைச்சர் சான், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடனும் சமூக சேவை அமைப்புகளுடனும் கல்வி அமைச்சு இணைந்து செயல்பட்டுவரும் நிலையில், கூடுதல் ஆதரவுக்கு அழைப்பும் விடுத்தார்.