சிங்கப்பூரில் உள்ள சமய அமைப்புகள் வழிபாட்டுத் தலங்களுக்காகச் செலுத்தும் புதிய நிலக் குத்தகைத் தொகையும் குத்தகையைப் புதுப்பிப்பதற்குச் செலுத்தும் தொகையும் இனி குறையவிருக்கிறது.
அரசாங்கம் வழிபாட்டு நிலங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான கொள்கைகளில் திருத்தம் செய்திருப்பது அதற்குக் காரணம்.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கான நில ஒதுக்கீடு குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படும்.
குத்தகை வழங்கப்படும் அமைப்புகள் நிலப்பகுதியின் சந்தை விலை அடிப்படையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டும் செலுத்தும்.
தேசிய வளர்ச்சி அமைச்சு அந்தத் தகவல்களை வெளியிட்டது.
தற்போது ஏலக் குத்தகை முறை நடைமுறையில் உள்ளது. 1990களின் தொடக்கம் முதல் அந்த அடிப்படையில்தான் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்களுக்கான நிலப் பகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அண்மைய ஆண்டுகளில் போட்டித்தன்மை அதிகரித்ததால் ஏலக் குத்தகைத் தொகை மிகவும் அதிகமாகிவிட்டது என்று சமய அமைப்புகள் அரசாங்கத்திடம் கவலை தெரிவித்திருந்தன.
அரசாங்கம் அதன் தொடர்பில் மறுஆய்வு செய்து நில ஒதுக்கீட்டுக் கொள்கையில் திருத்தத்தை அறிவித்துள்ளது.
இனி குலுக்கல்முறையில் குத்தகை வழங்கப்படும்போது சமய அமைப்புகள் ஏல நடைமுறையைவிடக் குறைவான தொகையையே செலுத்தும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறினார். நீ ஆன் சிட்டியில் நடைபெற்ற விசாக தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
குத்தகையைப் புதுப்பிப்பதற்கான தொகையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
பள்ளிவாசல்களுக்கான நிலப் பகுதி முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்திற்கு நேரடியாக ஒதுக்கப்படும். தலைமை மதிப்பீட்டாளர் நிர்ணயிக்கும் சந்தை விலையைச் செலுத்தி அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு, பின்னர் மன்றம் அவற்றைப் பள்ளிவாசல்களுக்கு ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
ஏல நடைமுறை இல்லாததால் பள்ளிவாசல்களுக்கான குத்தகைத் தொகை பொதுவாகக் குறைவாக இருப்பதாக சென்ற ஆண்டு அக்டோபரில் சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.
2011 முதல் 2020 வரையில் ஐந்து சீனக் கோயில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப் பகுதியின் மதிப்பு, ஒரு சதுர மீட்டருக்கு $1,752.
அதே காலகட்டத்தில் நான்கு தேவாலயங்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு $2,963 எனும் விலையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதிய நடைமுறையின்கீழ் சமய அமைப்புகள் அனைத்தும் பயன்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய நிலப்பகுதியைப் பெற்றுக்கொண்ட சமய அமைப்புகள் குலுக்கலில் பங்குபெற அனுமதிக்கப்படமாட்டா என்று தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியது.