சிங்கப்பூரின் சமய அமைப்புகள், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று பருவநிலை மாற்றத்துக்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனன் கூறியுள்ளார்.
சுற்றுப்புறத்தைப் பேணும் முயற்சிகளை மேற்கொள்ள சமய அமைப்புகள், சமயம் சார்ந்த கொள்கைகளை மூலம் தனிநபர்களை ஊக்குவிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி சமய அமைப்புகள் போதிக்கலாம் என்றும் திரு மேனன் கூறினார்.
‘பூமி நாள்’ அனுசரிப்பின்போது இடம்பெற்ற சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் திரு மேனன் பேசினார். “பருவநிலை மாற்றம் என்பது வெறும் கொள்கை அல்ல. அது அறம் சார்ந்தது, சமய அழைப்பு சார்ந்தது,” என்றார் அவர்.
சூரிய சக்தியைப் பயன்படுத்த ஊக்குவிப்பது, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தோர் வெப்ப அலை தாக்கத்திலிருந்து தங்களையே பாதுகாத்துக்கொள்ள உதவுவது போன்ற பழக்கங்களைச் சமய அமைப்புகள் ஊக்குவிக்கலாம் என்றார் திரு மேனன்.

