விற்கப்படாமல் எஞ்சியிருக்கும் கிட்டத்தட்ட 3,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் ஜூலை மாதம் விற்பனைக்கு விடப்பட இருக்கின்றன.
எஞ்சியிருக்கும் வீடுகள் விற்பனை இவ்வாண்டு இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது.
அதே சமயம், புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், கிளமெண்டி, செம்பவாங், தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளும் (பிடிஓ) விற்பனைக்கு விடப்படும்.
இரண்டாவது முறையாக நடத்தப்படும் எஞ்சியிருக்கும் வீடுகள் விற்பனையின்கீழ் விற்கப்படும் வீடுகளையும் சேர்த்து இத்திட்டத்தின்கீழ் இவ்வாண்டு ஏறத்தாழ 8,500 வீடுகள் விற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின்கீழ், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு வீடுகள் விற்கப்படுவது இதுவே முதல்முறை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
கடந்த பிப்ரவரி மாத்தில் 5,590 எஞ்சியிருக்கும் வீவக வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையைவிட அவற்றுக்கான விண்ணப்பம் செய்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
வீடுகளுக்காக 22,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு வரை எஞ்சியிருக்கும் வீடுகள் விற்பனைத் திட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டது.
2024ஆம் ஆண்டில் அது ஒருமுறை நடத்தப்பட்டது.
எதிர்வரும் விற்பனைத் திட்டத்தில் வீடுகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மே மாதம் 15ஆம் தேதிக்குள் வீவக வீட்டுத் தகுதி கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வீவக தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு, கிட்டத்தட்ட 19,600 வீவக வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீவக மறுவிற்பனைச் சந்தையில் விநியோக இறுக்கம் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்தை எட்டுவதில் குறைவான எண்ணிக்கைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் இதற்குக் காரணம் கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட கட்டுமான தாமதங்கள் ஆகும் என்றும் திரு லீ கூறினார்.
2026ஆம் ஆண்டில் சுமார் 13,500 வீடுகள் அவற்றின் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்தை எட்டும். இது 2025ல் 8,000 ஆக இருந்தது என்றும் 2028ஆம் ஆண்டில், இது 19,500 வீடுகளாக உயரும் என்றும் அவர் கூறினார்.

