ஜூன் மாதத்தின்போது சிங்கப்பூரின் முக்கியமான ஏற்றுமதிகள் வியக்கத்தக்க, வலுவான மறு ஏற்றத்தைக் கண்டுள்ளன.
மே மாதத்தில் பதிவான ஏற்றுமதி இறக்கத்திற்கு அடுத்ததாக நிகழ்ந்துள்ள இந்த ஏற்றம், மின்னணுவியல் பொருள்களிலும் மின்னணுவியல் அல்லாத பொருள்களிலும் காணப்பட்டன.
எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள், கடந்த ஆண்டைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் 13 விழுக்காடு உயர்ந்தன.
முன்னைய மாதத்தில் ஏற்றுமதி 3.9 விழுக்காடு குறைந்ததை அடுத்து அந்த உயர்வு ஏற்பட்டது. ஏற்றுமதி கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு உயரும் என்ற முன்னுரைப்பை, தற்போதைய புள்ளிவிவரங்கள் விஞ்சியுள்ளன.
2025ல் முதல் ஆறு மாதங்களாக, இறக்குமதிகள் 5.2 விழுக்காடு அதிகரித்தன.
மாறிவரும் வர்த்தக வரி விதிப்பைக் கண்காணித்து வருவதாக என்டர்பிரைஸ்எஸ்ஜி தெரிவித்தது. 2025க்கான எண்ணெய் சாரா ஏற்றுமதி முன்னுரைப்புகளைத் தேவைக்கேற்ப மாற்றும் என்று அது கூறியது.
2025ல் முக்கியமான ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதம் 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மே மாதத்திற்கான தனது வர்த்தக மறுஆய்வில் அந்த அமைப்பு குறிப்பிட்டது.
20க்கும் அதிகமான வர்த்தகப் பங்காளிகளுக்குக் கடிதம் எழுதியுள்ள திரு டிரம்ப், சிங்கப்பூருக்கு இன்னமும் கடிதம் அனுப்பவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் மீதான வர்த்தக வரியின் தற்காலிக நிறுத்தம், ஜூலை 9ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 1க்கு நீட்டிக்கப்பட்டது.
ஆயினும், சிங்கப்பூர் நிறுவனங்களின் எதிர்காலம் மீதான பாதிப்பை இது நீட்டித்து வருகிறது.
ஜூன் மாதத்தில், மின்னணுவியல் தயாரிப்புகளுக்கான ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 8 விழுக்காடு உயர்ந்தது.
மே மாதத்தில் பதிவான 1.6 விழுக்காடு வளர்ச்சியை நீட்டிக்கும் விதமாக அது உள்ளது.
ஒருங்கிணைந்த மின்சுற்றுகளின் ஏற்றுமதி 17. 5 விழுக்காடு அதிகரித்தது. தனிப்பட்ட கணினிகளின் ஏற்றுமதி 53.8 விழுக்காடு உயர்ந்தது.
மின்னணுவியல் ஏற்றுமதிகளுக்கு இந்த மூன்று பிரிவுகளின் அதிகம் பங்களித்துள்ளது.
சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா உள்ளது. அது, 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் உள்நாட்டு ஏற்றுமதியில் 11 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
அமெரிக்க வரிகளின் நேரடி தாக்கத்தால் மட்டுமின்றி, வரிவிதிப்புக்குள்ளான சீனா உள்ளிட்ட நாடுகள் மூலமாகவும் சிங்கப்பூர் மறைமுகமாகப் பாதிக்கப்படுகிறது.