மஸ்கட் நகரிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக சிங்கப்பூர் வந்தடைந்தனர்.
அபுதாபியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் துபாயில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகமும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) காலையில் அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்களை இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பின.
முன்னதாக, ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்த முதல் விமானத்தில் 152 சிங்கப்பூரர்களும் அவர்களது குடும்பத்தினரும் இன்று மாலை பாதுகாப்பாக வந்து இறங்கினர்.
சிங்கப்பூரில் உள்ள தங்களது அன்புக்குரியவர்களுடன் அவர்கள் மீண்டும் இணைவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக வெளியுறவு அமைச்சின் சமூக ஊடகப் பதிவு குறிப்பிட்டது.
இந்த விமானத்தில் சிங்கப்பூரர்களுடன் மலேசியா மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்தவர்களும் அழைத்து வரப்பட்டனர்.
இரண்டாவது விமானம் மஸ்கட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) புறப்படும் என்றும் அறியப்படுகிறது.
இதற்கிடையே, மஸ்கட், ஓமானிலிருந்து புறப்பட்ட முதல் விமானம் சிங்கப்பூரர்களுடன் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது குறித்து அறிந்தவுடன் தமது மகிழ்ச்சியை சமூக ஊடகப் பக்கத்தில் நன்றிப் பதிவாகப் பகிர்ந்துள்ளார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்.
‘‘இதனைச் சாத்தியமாக்கிய அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். இது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சி,’’ என்று கூறியுள்ளார் திரு லீ.

