அண்மையில் பிலிப்பீன்சை ‘டிராமி’ புயல் உலுக்கியது.
இதன் காரணமாக அந்நாட்டின் வடக்குப் பகுதியில் கனமழை பெய்ததுடன் வெள்ளம் கரைபுரண்டோடியது.
இந்நிலையில், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் பணிகளில் உதவ சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைக்குச் சொந்தமான சி-130 ரக விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்ஸ் அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த விமானம் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது சிங்கப்பூருக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலான நட்புறவையும் வலுவான தற்காப்பு உறவையும் பிரதிபலிப்பதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.
‘டிராமி’ புயல் காரணமாக பிலிப்பீன்சில் மாண்டோர் எண்ணிக்கை அக்டோபர் 25ஆம் தேதியன்று 76ஆக அதிகரித்தது.
வெள்ளம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 320,000 பேர் வெளியேற்றப்பட்டதாக அக்டோபர் மாதம் 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன.