கடந்த 2024ஆம் ஆண்டில் கம்போடிய மோசடிக் கும்பல் ஒன்றில் சேர்ந்தார் ஆடவர் ஒருவர். ஆனால், எந்தவொரு சிங்கப்பூரரையும் ஏமாற்றத் தவறியதால், மூன்று நாட்களிலேயே அவர் கும்பலிலிருந்து நீக்கப்பட்டார்.
சென்ற 2025ஆம் ஆண்டு செப்டம்பரில், அந்த மோசடிக் கும்பலுக்கு எதிராகக் காவல்துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டார்.
மலேசியரான 30 வயது யிப் சீ மிங், குற்றக் கும்பல் ஒன்றின் உறுப்பினராக இருந்ததற்கான ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அவருக்கு 16 மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பின்போது, ஏமாற்றுதல் தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில், ஜேசன் என நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட தனது நண்பர் மூலமாக யிப் அந்த மோசடி அழைப்பாளர் வேலையைப் பற்றி அறிந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நோம்பென்னில் தளம் கொண்ட அந்த மோசடிக் கும்பல், சிங்கப்பூரர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளை 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதிக்கும் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அந்தக் கும்பல் குறைந்தது 528 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
அவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய $52.5 மில்லியனை இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குறைந்தது 90 பேர் அடங்குவர். அவர்கள் கிட்டத்தட்ட $11.8 மில்லியனை இழந்தனர்.
2025ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த மோசடிச் சம்பவங்கள் குறைந்தபோதிலும், அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்த மோசடிகளின் எண்ணிக்கை, 2024இல் 1,504லிருந்து 2025இல் 3,363ஆக ஒரு மடங்குக்கும் மேல் கூடியது.

