வெளிநாட்டுச் சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக்கொள்பவரிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பவேண்டாம் என்று சிங்கப்பூர்க் காவல்துறை எச்சரித்துள்ளது.
விசாரணையில் உதவும்படி வரும் அத்தகைய அழைப்புகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும்.
அதுபோன்ற அழைப்புகள் பெரும்பாலும் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பானவை என்றனர் அதிகாரிகள்.
வெளிநாட்டில் உள்ள அமைப்புகளுக்குச் சிங்கப்பூரில் விசாரணை நடத்த எந்த அதிகாரமும் இல்லை என்றும் விசாரணையில் உதவும்படி நேரடியாக ஒருவரை அணுகமுடியாது என்றும் காவல்துறை (மார்ச் 13) சொன்னது.
உள்துறை அமைச்சின் இணையப் பாதுகாப்பு, தகவல், தொடர்புத் தொழில்நுட்ப நிர்வாகக் குழு (CIDG) பொதுமக்களையும் நேரடியாகத் தொடர்புகொள்ளாது.
உள்துறை அமைச்சிலிருந்து அழைப்பதாக வந்த ஆள்மாறாட்ட மோசடிக்கு ஆளானோர் இம்மாதம் 5,000 வெள்ளி இழந்தனர்.
அதுதொடர்பில் குறைந்தது ஒரு புகார் பதிவுசெய்யப்பட்டது.
அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்கள் பொதுமக்களை அழைத்து மலேசியாவில் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் குற்றச்செயலுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து மலேசிய சட்ட அமலாக்க அமைப்பிலிருந்து ஒருவர் பேசுவது போல மற்றொரு மோசடிக்காரர் பேசி மக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெற முயல்கின்றனர்.
முன்பின் தெரியாதவர்களுக்குப் பணத்தையோ தனிப்பட்ட விவரங்களையோ தரவேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.
சந்தேகம் இருந்தால் ‘ஸ்கெம்ஷீல்ட்’ அவசர எண்ணுக்கு அழைக்காலம் அல்லது www.scamshield.gov.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.